திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இந்திய முழுவதும் ரூ.500 கோடி பணமோசடி செய்த நிறுவனம் மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

சென்னை: நாடு முழுவதும் உள்ள பல கிறிஸ்துவ போதகர்களிடம் பல மடங்கு பணம் திரும்ப தருவதாக கூறி, சுமார் ரூ.500 கோடி அளவிற்கு பணம் வசூலித்து மோசடி செய்த ஜான் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிறிஸ்துவ அமைப்புகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் ஏசுதாஸ் மற்றும் தமிழக போதகர்கள் ஐக்கியம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த போதகர்கள் சிலரிடமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற கிறிஸ்துவ போதகர்களிடம் பழகிய ஜான் பிரபாகரன் என்பவர் போலியான வாக்குறுதிகளை அளித்து ஏராளமான பணத்தை வசூலித்துள்ளார்.
அவரது வாக்குறுதிகளின்படி, மாதம் ரூ.2,100 பணம் கட்டினால், ஒவ்வொரு மாதமும் ரூ.1,250 வீதம் ஆண்டு முடிவில் ரூ.13 ஆயிரத்து 750 கிடைக்கும் என்று கூறினார். மேலும் ரூ.5,250 கட்டினால் ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.33 ஆயிரம் கிடைக்கும் என்று கூறினார்.
ரூ.10 ஆயிரத்து 100 கட்டினால் மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.59 ஆயிரத்து 500 கிடைக்கும் என்றும் ரூ.26 ஆயிரத்து 250 கட்டினால் மாதம்தோறும் ரூ.13 ஆயிரத்து 750 வீதம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 250 கிடைக்கும் என்று கூறினார்.
இதை நம்பிய போதகர்கள், பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அவரிடம் கட்டியுள்ளனர். இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் ரூ.500 கோடி வசூலிக்கப்பட்டது.
ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு ஜான் பிரபாகரன் கூறியபடி, தவணை முறையில் பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து கேட்டால் தகுந்த பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறார்.
ஹெவன்லி இன்டர் பெனா மினல் மிஷன் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஜான் பிரபாகரனையும், அதன் நிர்வாகிகளையும் கைது செய்து மோசடி செய்த பணத்தை வசூலித்து தருமாறு கேட்டு கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் 19 போதகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை பணத்தை வசூலித்து ஜான் பிரபாகரனிடம் கொடுத்துள்ளனர். 19 போதகர்களும் மொத்தம் ரூ.7 கோடியே 38 லட்சம் பணம் வசூலித்து, ஜான் பிரபாகரனிடம் கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/08/27/tamilnadu-john-prabakaran-cheated-500-crore-organization-160347.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக