திங்கள், 14 ஜூன், 2010

கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல்: மன்னிக்குமாறு போப் கெஞ்சல்

கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார்.

வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த பாவத்திற்காக கடவுளிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோரி கெஞ்சுவதாக தெரிவித்த அவர், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார்.

பாதிரியார்களாக வருபவர்களை தேர்வு செய்வதற்கு இனி கடுமையான முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஏராளமான குழந்தைகள் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக