சனி, 12 பிப்ரவரி, 2011

கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி

இறைவன் மனிதனை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்துள்ளான். அவனை அறிந்து, நேசித்து, அவனை அடைவது தான் அவனது விருப்பம். பிறப்பின் மூலம் மனிதன் பல சமுதாயத்தில் சிதறி தோன்றியிந்தாலும் அவன் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டாமல் இல்லை...

அந்த அடிப்படையில் என்னையும் அவன் தேர்ந்தெடுத்து தான் விரும்பிய, அங்கீகரிகப்பட்ட மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைத்துள்ளான். நான் மட்டுமல்ல ஏராளமானோர் பல சமயங்களிலிருந்து இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமாகவே உள்ளனர். ஆனால் நான் வந்தது உலகத்தில் இன்று அதிகமானோர் இடம் பெற்றிருக்கும் கிறிஸ்தவத்திலிருந்து என்றால் அது இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இல்லையா என்ற கேள்வி தோன்றும். இதற்கு விடையாகத் தான் இந்த கட்டுரை இங்கே இடம் பெறுகிறது.

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் வாழும் இந்த மனித இனம் ஒரு சிலரால் கவரப்பட்டு, தங்களின் வாழ்நாட்கள் மதத் தலைவர்களின் போதனையால் அடிமைப்படுத்தப்பட்டு, மன எழுச்சி குன்றிப்போய் வாழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஏன் என்ற கேள்வியில்லாமல், தொலைந்து போன வாழ்வு வாடிய பயிராய் காய்ந்து போவதைவிட எதையும் ஏன், எதனால், எதற்காக என்ற பொதுவான கேள்வி கேட்டு அவரவர் தம் அறிவை கூர்மையாக்குவதே சிறந்தது. அப்போது அடிமைத்தளையில் ஒடுங்கிப்போன வாழ்வு புத்துயிர் பெற்று சீராக அமையும்.

யேசுநாதர் இந்த உலகில் ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை, மாறாக படைத்த இறைவனை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அவனை மட்டும் வணங்கவும் கூறிச்சென்றார். பின்னால் வந்தவர்கள் கிரேக்க, ரோமானிய வழிபாடுகளை கிறிஸ்தவத்ததின் பெயரால் அரங்கேற்றினார்கள். அதற்கு உதாரணமாக யேசுநாதர் பேதுருவிடம் சொன்ன இறுதி பேரூரைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமானது. பேதுரு என்ற ராயப்பர் இறை தூதர் அல்ல, யேசுநாதரின் முதன்மை சீடர், அவருக்கு திருச்சபை உருவாக்க அதிகாரம் கொடுத்ததாக யோவான் தமது நூலில் யோவான் 21:15-17 வரை குறிப்பிடுகிறார். இந்த செய்தி வேறு எந்த எழுத்தாளரும் எழுதவில்லை!

இயேசுநாதர் உலகத்தை விட்டு செல்லுமுன் சீமான் பேதுருவைப் பார்த்து ”நீ என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்ற மும்முறை மொழிந்ததை வைத்தே சிலர் இத்தாலியில் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரில் தொடங்கினார்கள். இது நீகியா கருத்தரங்கு அரங்கேறிய கி.பி 325-க்குபின் என்பது குறிப்படத்தக்கது. அதுவரை போப் வகையறாக்கள் இருந்ததாக முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திரித்துவம்—- அதாவது முக்கடவுள் கொள்கை என்ற போலிசித்தாந்தம் அதாவது ஏக இறைவனை மூன்றாகப்பிரித்து ஒன்றாக கருத வேண்டும் என்பதே நோக்கம். இதில் தான் மூச்சு முட்டுமளவு முடங்கி போய் மொத்த கிறித்தவரும் உள்ளனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒருவர் தான் என்பது இவர்களின் வாதம். இதை எதிர்த்த பிஷப்புக்கள் அன்று கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அர்யுஸ் என்ற பிஷப்பு கான்ஸ்டான்டி அரசனால் நாடு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதனை நமது நாட்டு வரலாற்றுப் புத்தகத்தில் கூட காணலாம்.

”நீ பூமியில் எதை கட்டுவாயோ அது பரலோகத்தில் கட்டப்படும். நீ பூமியில் எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும்” என்று பேதுருவைப் பார்த்து இயேசுநாதர் கூறியதை இதற்கு ஆதாரமாக வைத்து (மத்தேயு 16:15-19) புதிய ஒரு சபையை இயேசுநாதர் பெயரால் அரங்கேற்றம் செய்தார்கள்

ஆனால் இயேசுநாதர் முஸ்லிமாக இருந்தார், விருத்தசேதனம் செய்யப்பட்டார். அவருடைய மார்க்கம் இஸ்லாமாக இருந்தது. அவர் தமக்கு முன் உள்ள வேதங்களை உண்மைப்படுத்தவே வந்தார் என்பது தான் உண்மை (மத்தேயு 5:17)

திருச்சபையின் நூதன உபதேசங்கள்:

ஞானஸ்நானம் : சிப்கத்
உறுதி பூசுதல் : பையத் (ஸ்திரப்படுத்தல்)
பச்சாத்தாபம் : தவ்பா (மனஸ்தாபப்படுதல்)
நற்கருணை : அப்பம், ரசம் (சிலுவை மரணம் நினைவு கூர்தல்)
அவஸ்தை பூசுதல் : சக்கராத் ஓதல்
குருத்துவம் : அஹ்பாரிஸம் (துறவறம்)
திருமணம் : நிக்காஹ்

இவையெல்லாம் கடைபிடித்து நடந்தால் சுவர்க்கம் போக டிக்கட் கிடைக்கும். மத குருமார்கள் இறைவனின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றார்கள்! துறவறத்துக்கு வித்திட்டதும், கிறிஸ்துவ சபை உருவாக வழி வகுத்ததும் பவுல் என்ற யூதன் ஆவார். இவர் இயேசுநாதரின் சீடரோ அல்லது தீர்க்கதரிசியோ இல்லை. இயேசுநாதரின் காலத்தில் கிறித்துவ எதிரியாக வாழ்ந்தவர் கிறிஸ்துவின் கொள்கைக்கு சுய விளக்கம் கொடுத்தும், சிலுவை மரணத்தை நியாயப்படுத்தியும், ஆப்ராஹாமின் கொள்கையையும், மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்காமலும் இவராகவே பல கடிதங்கள் பல நாட்டவருக்கு எழுதி வேதவாக்கு என நம்பிடச் செய்தார்.

இவருடைய சித்தாந்தம் அன்றைய மத குருமார்களை பெரிதும் கவர்ந்ததால் பூசைப்பலி, திரித்துவக் கொள்கை, சிலுவை மரண வழிபாடு, பாவமன்னிப்பு ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.

கி.பி 1550 ஆண்டிற்கு பின்பு தான் திருச்சபை பல சபைகளாக பிரிந்தும் எதிர்த்தவர்கள் புரொட்டஸ்டன்டுகளாக மாறியும் கட்டுக் கோப்புகள் சீர்குலைந்தது இந்தியாவில் கிபி 1600-க்குப் பின்புதான் வெள்ளையர்கள் மூலமாக பல சபைகள் ஊடுருவின. பாமர மக்கள் பாவிகளாக இருந்தபடியால் இரட்சிப்பு இரத்தம் சிந்துதல் மூலம் தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இயேசு நாதரை அதற்கு பலிகடாவாக்கி நம்பினார்கள்.

எனது மூதாதயரும் இந்த போலி சித்தாந்தத்துக்கு கட்டுப்பட்டு கிறிஸ்தவரானார்கள். நானும் நீண்ட காலமாய் இதை புரியாமல் தடுமாறி பல சபைகளின் உபதேசத்தை நாடி தேடி அலைந்து முடிவில் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என குருட்டு நம்பிக்கையில் இருந்தேன்.

1995-ம் ஆண்டில் தான் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இயேசு நாதர் கூறிய அநேக உண்மைகள் இறைவன் மூலமாக அறிய முடிந்தது. போலியான உபதேசத்தால் வாழ்நாட்களின் பெரும் பகுதியை இழந்த நான் திருக்குர்ஆனை பல கோணங்களில் ஆய்வு செய்தேன். குர்ஆன் இறை தூதர் முஹம்மத்-வின் வார்த்தையாகவோ அல்லது தனி மனித கருத்தாகவோ அல்லாமல் அதன் பெரும்பாலான வசனங்கள் நபியே கூறுவீராக என்ற ஏவலின் அடிப்படையில் அமைந்த காரணத்தால் திருக்குர்ஆன் இறைவேதமே என புரிந்து கொண்டேன்.

இத்திருமறை தனி மனித வழிபாட்டை தரைமட்டமாக்கி சிந்திக்க தடையாக இருந்த புரோகித ஏஜென்டுகளையும், மத சித்தாந்தங்களையும், புறம் தள்ளி உண்மையை நன்கு உணர வைத்து விட்டது. அதாவது இயேசு நாதர் எப்படி பிறந்தார், இறைவன் மூலம் அவர் செய்த அற்புதங்கள், சிலுவையில் அறையவிடாமல் பாதுகாத்ததும் இதில் வருவதை காணலாம்.

இறைவனை எப்படி அறிவது, வணங்குவது என்பதையும் அவனை அடையவுள்ள எல்லா வழிமுறைகளையும் இறைதூதர் முஹம்மத் அவர்களுக்கு இறைவன் வழங்கியதை பார்க்கும் போது இயேசு நாதர் தமக்குப் பின்னால் வரவிருக்கும் ஒருவரை அறிமுகம் செய்தது இந்த முஹம்மத் நபியைத்தான் என பூரணமாக அறிந்து கொண்டேன். இதை மத்தேயு 21:33-44, யோவான் 16:7ல் காணலாம். திருமறை குர்ஆனில் 61:6ல் கூட இயேசுநாதரின் முன்னறிவிப்பைக் காணலாம்.

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சாத்தியங்களுக்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாக பேசாமல் நாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களைக் குறித்து உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13-ல் இதைப் பார்க்கிறோம். இதை சற்று விரிவுபடுத்தி படித்தால் திருமறை குர்ஆனில் 53:6-லி வரும் வசனங்கள் இதற்கு சான்றாய் அமைவதைக் காணலாம். சத்திய ஆவியானவர் கபிரியேல் என்ற வானவர் மூலம் இறை வசனங்கள் நபிக்கு வழங்கப்படுவதும், நபிநாதர் மன இச்சைப்படி பேசாமல், கேள்விப்பட்டதை பேசுவதையும் இறைவன் வெளிப்படுத்திய திருமறை குர்ஆனில் காணலாம்.

எனவே இறைவன் கூற்றுப்படி (2:79) தங்களின் கரங்களால் ஒரு நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது இறைவனிடமிருந்து வந்தது என்று சொல்லுகிறவர்களுக்கு கேடு என்பதை குர்ஆன் மூலம் புரிந்து கொண்டேன். சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே இருக்கிறது (17:81) எனவே கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாம் நோக்கி வந்தது பெரிய வியப்பொன்றுமில்லை. தங்கள் சொந்த மக்களை சந்தேகமில்லாமல் அறிவதைப்போன்று

போன்று வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இந்த வேதத்தையம், இந்த நபியையும் அறிந்து கொள்வார்கள் (திருக்குர்ஆன்: 6:20)

மேலும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒரு போதும் இறைவனால் அங்கீகரிக்கப்படமாட்டாது. மறுமைநாளில் அவர் நஷ்டவாளிகளில் ஒருவராய் இருப்பார் (அல்குர்ஆன் 3:85)

இப்படி அனேக வசனங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதினால் இயேசுநாதரைக் குறித்தும், அவருடைய தாயாரைக் குறித்தும் வரம்பு மீறாமல் இறைவனின் செய்திகளை நம்புவதே ஒரு உண்மை விசுவாசியின் நிலையாகும். இயேசு நாதர் இறைவனுமில்லை, இறைவனுடைய மகனுமில்லை, மாறாக மரியாளின் மைந்தனும், இறைவனுடைய வார்த்தையுமாவார். இதை அறிந்தவர் இயேசு நாதரின் மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைவது உறுதி. அந்த அடிப்படையில் நான் இஸ்லாத்தில் இணைத்தது மிகப்பெரிய வியப்பொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக