புதன், 1 செப்டம்பர், 2010

நினைவெல்லாம் நித்யா

பெங்களூர் M.Sகமாலுத்தீன்

“உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம் கழுத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோரமுகங்களில் ஒன்று மன அழுத்தம் (Tension). ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர்கள் மன அழுத்தத்தால் மருத்துவர்களை நாட, திகைத்து போனது மருத்துவ உலகம். மருந்து கண்டுபிடிக்க கால அவகாசம் எடுத்த நேரத்தில் நீண்டது வரிசை. அழுத்தம் தாங்காமல் அலறினார்கள் பலர். சிலர் சுய வைத்தியமாக “தற்கொலை’ செய்துகொள்ள ஆன்மீகத்தை நாடும்படி அறிவுறுத்தப்பட்டது. துரித உணவு (Fast food) கலாசாரத்தில் பழகிப் போனவர்கள் ஆன்மீகத்திலும் அதையே எதிர் பார்த்தார்கள். அங்குதான் போனியாகாமல் கிடந்த யோகா (Yoga)வுக்கு புது வாழ்வு கிடைத்தது.

இந்து மதத்தின் மிகச்சிறந்த கலையாக யோகா முன் நிறுத்தப்பட்டது. இதைக் கற்றுக் கொண்டால் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடலாம். ஆயுள் அதிகரிக்கும், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என சொன்னதோடு நில்லாமல் ஊடகங்கள் மூலம் உயர்த்தியும் பிடித்தார்கள். “அவாள்’ நடத்தும் பத்திரிக்கைகளில் முன்னுரிமை தந்தார்கள். சிறு செய்திகளையும் கட்டம் போட்டு கவனம் ஈர்த்தார்கள். விளைவு பலர் காவி உடை தரித்து களம் இறங்கி கோடி கோடியாகக் காசு பார்த்தார்கள். அத்தகையவர்களில் ஒருவன்தான் திருவண்ணாமலையை சேர்ந்த அருணாச்சலம் முதலியாரின் மகன் ராஜசேகர்.

ஜெயின் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியை முடித்து, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் டிப்ளமோவை அரைகுறையாக முடித்து 16 வயதில் வீட்டை விட்டு ஓடி சாமியார்களிடம் சில சித்து விஷயங்களை கற்று புத்தாயிரம் தினமான 2000 ஜனவரி 1ம் தேதி ஞானம் பிறந்ததாக பொய் சொல்லி “பரம ஹம்ஸா நித்யானந்தாவாக’ தன்னை அறிமுகம் செய்து கொண்டு 2003ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் முதல் ஆசிரமத்தை பெங்களூர் புறநகர் பகுதியான “பிடுதி’யில் 14 ஏக்கரில் தலைமை நித்தியானந்த பீடம் அமைத்தது வரை சந்தேகம் ஏற்படாத கெட்டிகாரத் தனம். இது பிரசங்கத்திலும் தியானம், யோகா, ஹீலிங் பயிற்சி தருவதிலும் தென்பட்டது.

முப்பத்தி மூன்று நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கிளைகளையும் இருபது ஆயிரம் கோடி சொத்து மதிப்போடு இயங்கிய 2010 ஆசிரமத்தின் கதவை திறந்தால் காற்று வரவில்லை. காமக் காட்சிகள் தான் சி.டி.யாக வெளி வந்தன. மார்ச் 3ம் தேதி நக்கீரன் இதழிலும 4ம் தேதி சன் தொலைக் காட்சியிலும் கண்றாவிக் காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களை கொதிப்படைய வைத்தார்கள். ஆசிரமங்கள் அமைந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் காரித் துப்பி செருப்பால் அடித்து தீ வைத்தார்கள். சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக் கூடாது, தொடக்கூடாது ஏன் பெண் வாசனையே கூடாது என வழிமுறை வகுத்தவன் தன் தியான கூட்டத்துக்கு வரும் அழகான பெண்களை கட்டிப்பிடித்து ஆசீர்வதிப்பான்.

ஆசிரமத்தில் நூறுக்கும் மேற்பட்ட இளம் சந்நியாசினிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் “நான் கிருஷ்ணனின் அவதாரம்; நான் கொஞ்சும் பெண்கள் எல்லாம் கோபியர்கள். உங்கள் நினைவெல்லாம் நித்யாவாக இருக்க வேண்டும், அது உங்கள் பெயர்களிலும் பிரதி பலிக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஆனந்தமடையும், அது ஞானத்தை அடைய வழிகாட்டும்; என் நிலையே நீ அடைய என் விருப்பத்தை நிறைவேற்று.’

தெய்வத்தோடு இரண்டரக் கலப்பதாக நினைத்துக்கொண்டு பல இளம் பெண்கள் கற்பை இழந்த கதைகள் நிறைய உண்டு, பல ஆயிரம் சீடர்கள் தங்கள் வாழ்வை இவனுக்காக அர்ப்பணித்ததன் மூலம் ஆன்மீகத்தில் ஏதோ சாதித்து விட்டதாக மனப்பால் குடித்துள்ளார்கள். எந்த மன நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நித்யானந்தாவை தேடி வந்தார்களோ அவர்களில் சிலருக்கு இவன் பொய்யன் என்பது புலனாகியது. அவர்கள் வெளியேற முயற்சிக்க சிலர் கொலை செய்யப்பட்டார்கள். அது தற்கொலையாக பதிவு செய்து கொண்டது போலீஸ்; வெளியேறும் எண்ணமுடைய பலர் உயிர் வாழ ஆசைப்பட்டு ஊமையானார்கள்.

ஊர் ஊராக சென்று “சத்சங்கம்’ நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் பொருளாதாரம் சுரண்ட புதிய சீடர்கள் கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். தன் சூன்ய பேச்சால் சீடர்களை சுத்தமான மடையர்களாக்குவதன் மூலம் தன் சுக வாழ்வின் எல்லை விரிந்து கொண்டே போகும். இதுதான் 99 சதவிகித சாமியார்களின் இலக்கு. இதற்காக இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இவர்களை மக்கள் முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும், காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகளாக நம்பி மோசம் போகிறவர்களை யார் காப்பாற்றுவது?

இறைக் கொள்கை சரியில்லாத எல்லா மதங்களிலும் ஏமாற்று வேலையுண்டு. இந்து மதத்தில் இது சற்று அதிகம். சிக்குவது சிலர்தான். மடங்களிலும், ஆதினங்களிலும் சிக்க வேண்டியவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள். இவர்கள் சிக்கினாலும் கூட ஒருமாத பரபரப்புச் செய்தி அவ்வளவே! இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

1431 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் மிக தெளிவாக சொல்லிவிட்டது இப்படி; “துறவித் தனத்தை நாம் (அகில உலகத்தின் இறைவனாகிய அல்லாஹ்) அவர்கள் மீது கடமையாக்கவில்லை. அதனை அவர்களே கடமையாக்கிக் கொண்டார்கள். அதனை பேண வேண்டிய அளவுக்கு அவர்கள் சரிவரப் பேணவில்லை’ (திருகுர்ஆன் 57:27)

32 வயதுக்குள்ளாக புகழின் உச்சத்தை அடைந்த நித்யானந்தா இல்லறத்தில் பகிரங்கமாகவே ஈடுபட்டிருக்கலாம். திருமணத்தை யாரும் தடுக்கப்போவதில்லை. போலியான வழிமுறையை உருவாக்கி கொண்டு பொய்யும் புரட்டையும் மூலதனமாக்கி கொண்டு ஞானம் அடைந்து விட்டதாக சொல்வது மிகப் பெரிய ஏமாற்று வேலை. ஆசை, பாசம், அன்பு, கோபம், மகிழ்ச்சி இவை எல்லாம் மனித இயல்புகள். இதை மீறி வாழ முடியாது. இதை ஊருக்கு உபதேசிப்பவனும் ஒழுங்காக பின் பற்ற முடியாது என்பதை நித்தியானந்தா விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இஸ்லாத்தில் இத்தகைய மோசடிகள், ஏமாற்று வேலைகள் என எதுவுமில்லை. எல்லாமே மிகத் தெளிவானவை. அப்படியானால் முஸ்லிம்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?! இறைப் புகழ்ச்சியும் உடல் பயிற்சியும் இணைந்த தொழுகையும் “துஆ’வும்தான் மன நிம்மதியை தருகிறது. ஐவேளை தொழுகை தரும் ஆறுதலை எந்த தியானமும், யோகாவும் தந்துவிடாது. இதை 1431 வருடங்களாக முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தங்கள் பொருளாதாரமும் பொன்னான வாழ்வும் ஆன்மீக ஆசாமிகளிடம் அடகு வைத்து விடாமல் அரணாக இஸ்லாம் காக்கிறது.

சகோதர சமுதாயத்தவர்களுக்கு நாம் சொல்வது இதுதான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! இவ்வுலகிலும் மறு உலகிலும் மகத்தான வெற்றி பெறுவீர்கள். இந்த நிஜமான வெற்றியை யாரும் பெற்றுத் தந்துவிட முடியாது. இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே நிஜமான ஆன்மீக வெற்றி சாத்தியம். இது பற்றி இறுதி நெறிநூலான திருகுர்ஆன் சொல்கிறது இப்படி;

“இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வோர் உதாரணத்தையும் அவர்கள் உபதேசம் பெறுவதற்காகத் திட்டமாக நாம் விளக்கியுள்ளோம்’ (குர்ஆன் 39:27) “மனிதர்களே! உங்களுடைய (ஒரே) இறைவனை வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான்; (அவனை வணங்குவதால்) நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்’ (உங்கள் இறைவனாகிய அல்லாஹ்) அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் கனி வகைகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான்; எனவே (இவற்றை) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும், எவரையும் இணை ஆக்காதீர்கள். (திருகுர்ஆன் 2:21,22)

இன்னும் (இந்நெறிநூலின் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு அதன் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனச் சோலைகள் நிச்சயம் அவர்களுக்கு உண்டு என்று (இறைத்தூதரே!) நற்செய்தி கூறுவீராக (நெறிநூல் 2:25) இந்த மகத்தான வெற்றியின்பால் அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக